திருப்போரூர் ஒன்றிய தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்

திருப்போரூர்: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை யொட்டி திருப்போரூர் ஒன்றிய, நகர தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் திருப்போரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் வரவேற்றார். நகர செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய, நகர நிர்வாகிகள் கெஜராஜன், அருள்தாஸ், விஜயகுமார், இராஜாராம், எல்லப்பன், கௌரிசங்கர், வாசுதேவன், இரவிக்குமார், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள், நிலை முகவர்கள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி, வார்டு செயலாளர்கள் ஆகியோர் செயல்பட வேண்டிய முறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் அவர் பேசியது, மக்களிடம் சென்று அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வாக்குகள் சேகரித்து வெற்றி பெற முடியாது என்பதால் குறுக்கு வழியில் வாக்கு சேகரிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோரின் வாக்குகளை தபால் வாக்குகள் என்ற பட்டியலில் சேர்த்து இந்த வாக்குகளை கள்ளத்தனமாக அவர்களே போட முடிவு செய்துள்ளனர். ஆகவே, தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு இந்த தபால் வாக்குகளை சரியான முறையில் போடுவதற்கு உதவி செய்ய வேண்டும். அதேபோன்று திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவித்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வேட்பாளராக யாரை அறிவித்தாலும் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் மாவட்டப் பிரதிநிதி சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: