2 வருடங்களாக சம்பளம் இல்லை தத்தளிக்கும் எச்எல்எல் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அடுத்த திருமணி கிராமத்தில், கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசு மூலம் எச்எல்எல் நிறுவனம் மூலம் மிகப்பெரிய உயிர்காக்கும் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை 100 ஏக்கர் பரப்பளவில் 55,685 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இதில், அம்மை, உயிர்காக்கும் தடுப்பூசிகள் மற்றும் உள்ளிட்ட மருந்துகள் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு அதற்கான ஆய்வு தளவாடங்கள் அனைத்தும் நிறுவப்பட்டு தடுப்பூசிகள் தயாரிக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம், மேற்கண்ட நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையுடன் செயல்பட முடியாது என்று தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்தது.

இதனால், பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டத்தால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்நிறுவனத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், விரைவில் நிறுவனம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். இந்நிலையில், இந்நிறுவன ஊழியர்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கடன்தொல்லையில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்நிறுவனத்தில் பணிசெய்து வந்த அரசு என்ற ஊழியர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக தொடங்க வேண்டும், உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதி வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நிறுவனத்தின் முன்பு ஊழியர்கள் நேற்று கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளா் எஸ்.கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் இ.சங்கர் மற்றும் நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகி விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: