ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் திருக்கோயிலுக்கு நாள்தோறும் மலையேற இன்று (ஜூன் 22) முதல் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தினந்தோறும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் தினந்தோறும் மலையேறி சாமி தரிசனம் செய்ய இன்று முதல் தடை அமலுக்கு வந்தது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 2015-ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என மாதம் 8 நாள்கள் மட்டும் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாள்தோறும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வந்தனர். வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெரிய அளவில் மழை பெய்யாததாலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படாததாலும் சதுரகிரி செல்ல பக்தர்களுக்குத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
ஆனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நாள்தோறும் மழைப் பொழிவைப் பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பக்தர்கள் நாள்தோறும் மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு இன்று(ஜூன் 22) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
