பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே திப்பம் பட்டியிலிருந்து ஆச்சிப்பட்டி வரையிலான புறவழிச்சாலையில், பழுதான இடங்களை கண்டறிந்து அதனை சீர்செய்யும் பணி சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் திப்பம் பட்டியிலிருந்து அனுப்பர்பாளையம் வரையிலான புறவழிச்சாலை வழியாக செல்லும், பொள்ளாச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.இதற்கிடையே பாலம் அமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் ஜல்லி கற்கள் சிதறியபடி போடப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருவோர் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊசிபோன்ற கற்கள் கிடப்பதால், டயர்களை பதம் பார்க்கிறது.
எனவே, கிழக்கு புறவழிச்சாலையில் சிதறி கிடக்கும் கற்களை அகற்ற வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அதேபோல், பொள்ளாச்சி நகரில், கிழ மேல் ராஜாமில் ரோட்டிலிருந்து பாலக்காடு ரோடு வழியாக புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட பகுதியில் மணல் மேடாக இருப்பதுடன், ஜல்லி கற்களும் சிதறி கிடக்கிறது. இதனால், அந்த வழியாக வரும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, வாகன போக்குவரத்து அடிக்கடி உள்ள முக்கிய ரோடுகளில் உள்ள சிதறி கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
