கரூர், மார்ச் 9: கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர்கோயில் நிலத்தில் வசிப்போருக்கு அடிமனை வாடகை பலமடங்கு உயர்த்தியுள்ளதால் பழைய வாடகையே வசூலிக்க அனுமதி வழங்க வேண்டும் கள்ளப்பள்ளி கிராம பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கரூர் மாவட்டம் கள்ளப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்த மக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோயில் நிலத்தில் நாங்கள் அனைவரும் மூன்று தலைமுறைகளாக குடியிருந்து வருகிறோம். நிலத்தின் அடிமனை வாடகை ரூ. 6 முதல் 500 வரை ஆண்டு வாடகையாக செலுத்தி வருகிறோம். தற்போது வாடகை பல மடங்கு உயர்த்தி ரூ. 6ஆயிரம் வரை கட்ட வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். வாடகை கட்டவில்லை என்றால் காலி செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதனால், நாங்கள் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். எனவே, எங்களுக்கு பழைய வாடகை செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.