திருப்பூர், மார்ச் 9: திருப்பூரில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவை தொகுதி வாரியாக இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டரும் , தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் தலைமையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பல்லடம் மற்றும் திருப்பூர் (தெற்கு) வட்டாட்சியர் அலுவலக பாதுகாப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டன. கணினி வழியில் குலுக்கல் நடத்தி அதற்குரிய தொகுதிகளுக்கான எண் இடப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்டது.