திருப்பூர், மார்ச் 9: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைெயாட்டி, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் கணக்கு அலுவலர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி உதவி ஆணையர்கள் வாசுக்குமார், செல்வநாயகம், சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி வகுப்பில், வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படுத்துவது குறித்து மண்டல அலுவலர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் பொருத்தப்படும் வி.வி.பேட் கருவி குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் 50க்கும் மேற்பட்ட மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.