பூக்கள் சாற்றி பக்தர்கள் வழிபாடு புதிய லாரி புக்கிங் சென்டர் திறப்புக்கு சிஐடியூ எதிர்ப்பு

திருச்சி, மார்ச் 8: சிஐடியூ சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 18 லாரி புக்கிங் ஆபிஸ்கள் உள்ளன. இங்கு 150க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் கூலி உயர்வு கேட்டு முறையாக மனு கொடுக்கப்பட்டது. ஆனால் முதலாளிகள் தரப்பில் கூலி உயர்வு தர மறுத்து இஷ்டம் இருந்தால் வேலை செய்யுங்கள் இல்லையென்றால் வர வேண்டாம் என கூறிவிட்டனர். இதையடுத்து கடந்த 6.1.21 அன்று கிழக்கு தாசில்தார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் லாரி வாடகை உயர்த்தினால் கூலி வேலை தருகிறோம் என்றனர். தற்போது 30 சதவீதம் வரை வாடகை உயர்த்தியுள்ளனர். 7 முதலாளிகளில் 23 சதவீத கூலி உயர்வு தருவதாக ஒப்புக்கொண்டனர். மீதமுள்ள முதலாளிகள் ஒப்புக்கொள்ளாத நிலையில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் முன்னிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த லாரி புக்கிங் ஆபீஸ் மூடிவிட்டு திருச்சி தஞ்சை சாலையில் இன்று (8ம்தேதி)  பேரமைப்பு லாரி புக்கிங் சென்டர் என்ற பெயரில் புதிய லாரி புக்கிங் ஆபிஸ் தொடங்க உள்ளனர். இங்கு புதிய ஆட்களை வைத்து வேலை பார்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 150 தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இது ஏற்கனவே வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட விரோத செயலாகும். தொழிற்சங்கம் சார்பில் கூலி உயர்வு போன்ற பிரச்னைகளை தொழிலாளர் துறை அணுகி தீர்த்துக்கொள்ள வேண்டும். பழைய ஆட்களுக்கு பதிலாக புதிய ஆட்களை நியமிக்க கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதை தவிர்த்து இன்று (8ம் தேதி) காலை திருச்சி-தஞ்சை சாலையில் புதிதாக பேரமைப்பு லாரி புக்கிங் சென்டர் திறக்கப்பட்டால் அங்கு சிஐடியூ சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் 2,000 தொழிலாளர்களை குடும்பத்துடன் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: