செங்கம், மார்ச் 8: செங்கம் அருகே ஏரிக்கால்வாய்களை தூர்வார வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் இருந்து பாசன தேவைக்காக கடந்த 24ம் தேதி முதல் 20 நாட்களுக்கு செய்யாற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 50க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர் நிரம்பி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏரிக்கால்வாய்களை முறையாக தூர்வாரி ஆழப்படுத்தாததால் குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டும் அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லாமல் வறண்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டும் அலட்சியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து செங்கம் அடுத்த கரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஏரி பாசன சங்க நிர்வாகிகள் நேற்று பொதுப்பணித்துறை அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.