வேலூர், மார்ச் 8: வேலூர் கோட்ட தலைமை தபால் நிலையத்தில் நடைபெறும் உலக மகளிர் தின விழாவில் சிறந்த அஞ்சல் பெண் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. வேலூர் கோட்ட தலைமை தபால் நிலையத்தில் இன்று உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு தலைமை தபால் அலுவலகத்தின் மூலம் பட்டுவாடா செய்யப்படும் அனைத்து தபால்களின் மீதும் உலக மகளிர் தின சிறப்பு அஞ்சல் முத்திரை இடப்படுகிறது. தொடர்ந்து மதியம் தபால் சேவையில் சிறந்த அஞ்சல் பெண் ஊழியர்களான தபால் அலுவலர்கள் தொரப்பாடி வி.கலைசெல்வி, ஒடுகத்தூர் பி.திவ்யலட்சுமி, லத்தேரி தபால் உதவியாளர் ஜெய, ரங்காபுரம் பி.பார்வதி, ஆசனாம்பட்டு நிர்மலாதேவி, திருமணி அனிதா, அப்புக்கல் கீதா, வேலூர் துணை தபால் வில்லை விற்பனையாளர் நிர்மலா ஆகிய 8 பேரை கவுரவித்து சென்னை மண்டல தபால் இயக்குனர் சோமசுந்தரம் பரிசுகள் வழங்குகிறார். தொடர்ந்து சிஎம்சி நிறுவனர் ஐடா ஸ்கடரின் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிடுகிறார். அதனை சிஎம்சி இயக்குனர் ஜே.வி.பீட்டர் பெற்றுக் கொள்கிறார். இவ்விழாவில் வேலூர் கோட்ட கண்காணிப்பாளர் கோமல்குமார், தலைமை தபால் நிலைய அலுவலர் சீனிவாசன், உதவி கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன், மேற்கு கோட்ட கண்காணிப்பாளர் திருஞானசம்பந்தன், பிஎஸ்ஓ செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.