நன்றி குங்குமம் டாக்டர்
சாதாரணமாக கிடைக்கக்கூடிய கொய்யா இலைகளில் ஆன்டி ஆக்ஸிடண்ட், ஆன்டி பாக்டீரியா எதிர்ப்பு, நார்ச்சத்து, வைட்டமின் ‘சி’ போன்றவை உள்ளன.கொய்யா இலைகளை சாறெடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் சுரப்பியினை தூண்டி சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் உள்ளீர்ப்பை தடுக்கிறது. மேலும், ரத்தத்தின் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. குறைந்த அடர்த்தி கொழுப்பு, புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது.
கொய்யா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாக உதவுகின்றன.கொய்யா இலைகளை இடித்து சாறெடுத்து, அத்துடன் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும்.கொய்யா இலைகளை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அத்துடன் சிறிதளவு துளசியும், இஞ்சியையும் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வந்தால் மூச்சுக் குழாய் அலர்ஜி நீங்கும்.
செரிமான கோளாறு உள்ளவர்கள் ஐந்து கொய்யா இலைகள், சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் வயிறு உப்புசம் குறைந்து, உணவு எளிதில் ஜீரணம் அடையும்.கொய்யா இலைகளின் சாற்றை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாறெடுத்து வாரம் ஒருமுறை தலையில் நன்கு தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்பு முடியை அலசி வந்தால் அரிப்பு நின்று விடும். தலை முடியும் அடர்த்தியாகும். மேலும், பேன் தொல்லைகள் இருந்தால் நீங்கி விடும்.
எளிதாக கிடைக்கும் கொய்யா இலைகளை பறித்து சாறெடுத்தும், தண்ணீர் விட்டு கொதிக்க வைத்தும் தினசரி உபயோகித்து வந்தால் பக்க விளைவுகள் இல்லாத நோய்களுக்கு தீர்வு ஏற்படும்.
தொகுப்பு: – கே.சித்ரா, சென்னை.
