வெப்பம் அதிகரிப்பால் கோழிகளில் தீவன எடுப்பு குறையும்

நாமக்கல், மார்ச் 8:நாமக்கல் மாவட்டத்தில் உயர்ந்து வரும் பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகளால், கோழிகளிடையே தீவன எடுப்பு குறையும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.  மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (9ம் தேதி) தெளிவான மேகமூட்டத்துடன் காணப்படும்.

 காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வீசும். வெப்ப நிலையை பொறுத்த வரையில் அதிகபட்சம் 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும். நாமக்கல் மாவட்டத்தில் உயர்ந்து வரும் பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகளால் கோழிகளிடையே தீவன எடுப்பு குறையும். மேலும் வயதான மற்றும் அதிக எடையுடைய முட்டைக்கோழி வகைகளில், அதிக வெப்ப அதிர்ச்சி காரணமாக இறப்பும் ஏற்படலாம். எனவே லேசான மழை காரணமாக, அதிக ஈரப்பதம் மற்றும் வெப்ப அதிர்ச்சிக்கு வாய்ப்பு உள்ளதால், பண்ணையாளர்கள் மதியம் 1 மணிக்கு மேல் 5 மணி வரை தீவனம் அளிப்பை நிறுத்தி, கோழிகளின் இறப்பை தவிர்க்கலாம்.

கடந்த வாரம் வெப்ப அயற்ச்சி காரணமாக கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்தது, கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்து உள்ளது.  எனவே, பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க வெயில் நேரங்களில் தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும். தீவனத்தில் சமையல் சோடா மற்றும் தாது உப்பு கலவைகளை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: