உளுந்தூர்பேட்டை, மார்ச் 8: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு ஐடிஐ எதிரில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒரு டிப்பர் லாரி, பெட்ரோல் போட்டுவிட்டு திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மேலே சென்ற மின்சார ஒயரில் லாரியின் பின்பகுதி பட்டு, மின்கம்பியை இழுத்து சென்றது. இதில் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டதுடன் அந்த பகுதியில் இருந்த 6 மின்கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்தன. மேலும் ஒரு மின்மாற்றியும் சேதம் அடைந்தது. இதனால் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட ஒயர்களை அகற்றி, மாற்று வழியில் மின் இணைப்பு கொடுத்தனர். லாரி மோதிய விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மின்சார கம்பங்கள், மின்மாற்றி மற்றும் ஒயர்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.