நெய்வேலி, மார்ச் 8: வடலூரில், தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடலூர் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்பரசி வரவேற்றார். என்எல்சி சமூக பொறுப்புணர்வு தலைமை பொது மேலாளர் மோகன், ஏரிஸ் கலை கல்லூரி முதல்வர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்து பேசுகையில். தாய்க்கு பிறகு தாய்மொழியை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியராக பதவியில் இருக்கும் நான், தமிழ் வழி கல்வியில் பயின்று உயர்ந்து மாவட்ட ஆட்சியராக வந்துள்ளேன்.
தமிழ்மொழி மிகவும் தொன்மையானது, பழமையானது. அதனை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும், என்றார். பேரணியில், சுமார் 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வள்ளலார் சபை வளாகத்தில் இருந்து புறப்பட்டு வடலூர் பேரூராட்சி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் கீதா, வடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் கல்விராயர், பேரூராட்சி பணி மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன், கருங்குழி ராஜேந்திரன், தமிழ் ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.