×

312 டன் காய்கறிகள் ரூ.1.39 கோடிக்கு விற்பனை

 

சேலம், ஜூன் 15:வைகாசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் 312 டன் காய்கறிகள், ரூ.1 கோடியே 39 லட்சத்திற்கு விற்பனையானது. சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, இடைப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, மேச்சேரி, வாழப்பாடி ஆகிய 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைகளில் வழக்கமான நாட்களை விட, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதலாக காய்கறிகள் விற்பனையாகும். நேற்று வைகாசி அமாவாசையையொட்டி, காய்கறிகளின் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பூசணிக்காய், அகத்திகீரை, வாழைப்பழம் உள்ளிட்ட பல வகை காய்கறிகள் அதிகளவில் விற்பனையானது. மொத்தம் 13 உழவர்சந்தைகளிலும் 1115 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 312 டன் 100 கிலோ காய்கறிகள் ரூ.1 கோடியே 39 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதனை 74 ஆயிரத்து 998 வாடிக்கையாளர்கள் வாங்கிச்சென்றனர். இதேபோல் சின்ன, பெரிய கடைவீதி, மாநகராட்சி வணிக வளாகம், பால் மார்க்கெட், ஆனந்தா காய்கறி மார்க்கெட், பட்டைகோயில், தாதகாப்பட்டி காய்கறி மார்க்கெட் உள்பட பல பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டிலும் விற்பனை அமோகமாக இருந்தது.

 

Tags : Salem ,Vaikasi Amavasya ,Salem district ,Suramangalam ,Dadakapatti ,Astampatti ,Ammapettai ,Idappadi ,Ilampillai ,Mettur ,Jalakandapuram ,Athur ,Dhammampattai ,Attaiyampatti ,
× RELATED மண் கடத்திய டிப்பர் லாரி பொக்லைன் பறிமுதல்