தேர்தல் பொருட்களுடன் கொரோனா கிட்

கோவை, மார்ச் 8: தேர்தல் பொருட்களுடன் இம்முறை கொரோனா கிட்டும் இணைத்து வழங்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி மையம் தயார்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும், ஒவ்வொரு தொகுதிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்களுடன் வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை, எழுதுகோல், வாக்காளர் விவரங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட பொருள்கள் வழங்கப்படும்.

இப்பொருட்கள் தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி, கோவையில் 10 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனுடன் அழியாத மை உள்பட பொருட்களும் அனுப்பி வைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. கொரோனா பாதிப்பால் இம்முறை தேர்தல் பொருட்களுடன் கொரோனா கிட்டும் இணைத்து வழங்கப்படுகிறது. இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா பாதிப்பால் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கவும், கிருமி நாசினி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தெர்மல் ஸ்கேனர், முகக்கவசம், கையுறைகள், கிருமிநாசினி அடங்கிய கொரோனா கிட்டும் தேர்தல் பொருள்களில் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கழகம் சார்பில் வழங்கப்படும் முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் கருவி, கிருமி நாசினி, கையுறைகள் உள்பட பொருட்கள் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் மூலம் பேக்கிங் செய்யப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வழங்கப்படும். இந்த கொரோனா கிட் 10 தொகுதிகளிலும் உள்ள 4 ஆயிரத்து 427 வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: