பொதுமக்களை தாக்கிய சைக்கோ வாலிபர் செங்கத்தில் பரபரப்பு கற்கள், விறகு கட்டையால்

செங்கம், மார்ச் 7: செங்கம் நகரில் பொதுமக்களிடம் ரகளை செய்த சைக்கோ வாலிபருக்கு சரமாரி அடிஉதை விழுந்தது. செங்கம் துக்காப்பேட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் முன்பு நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரகளை செய்து கொண்டிருந்தார். அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறிய ஓட்டல் உரிமையாளர் மற்றும் பணியாளரை ஆபாசமாக பேசியதுடன், கையில் இருந்த விறகு கட்டை, கற்களால் தாக்கி ஆட்டம் காண்பித்து கொண்டிருந்தார்.

தகவலறிந்த செங்கம் போலீசார் மற்றும் பொதுமக்கள் வாலிபரை பிடிக்க நெருங்கும்போது, அவர்களையும் விறகு கட்டையால் தாக்க ஆரம்பித்தார். மேலும், அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஓட்டலின் கண்ணாடி கதவுகள் உடைத்து பெரும் ரகளை செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், பெரும் போராட்டத்துக்கு பிறகு அந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அந்த வாலிபரை செங்கம் போலீசார் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபர் மனநிலை பாதித்தவர்போல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பட்டப்பகலில் டிஎஸ்பி அலுவலகம் அருகில் நடந்துள்ள இச்சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனே தெரிவித்தும் அவர்கள் அலட்சியமாக இருந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

Related Stories: