5 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்; கணவன் கைது செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு, மார்ச் 7: செய்யாறு அருகே குடும்ப தகராறில் 5 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதையடுத்து, கணவன் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வன்னியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி திவ்யா(22). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. விஸ்வந்த்(2) என்ற மகன் உள்ளார். தற்போது திவ்யா 5 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த திவ்யா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டாராம். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு நெடும்பிறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திவ்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திவ்யாவின் தாயார் சித்ரா செய்யாறு போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், திவ்யாவின் உறவினர்கள், இறப்புக்கு காரணமான அவரது கணவன், மாமியார், மாமனாரை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று மதியம் 12.45 மணியளவில் செய்யாறு அரசு மருத்துவமனை எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஆற்காடு சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், செய்யாறு போலீசார் இறந்த திவ்யாவின் கணவர் பாலாஜியை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பாலாஜியின் தந்தை லட்சுமணன், தாயார் சந்திரா ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும், திவ்யாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், செய்யாறு ஆர்டிஓ விஜயராஜ் விசாரணை நடத்தி வருகிறார். 5 மாத கர்ப்பணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செய்யாறு பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: