பொள்ளாச்சி, மார்ச். 7: பொள்ளாச்சி தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பறக்கும் படையினருக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார். டி.எஸ்பி. சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின்போது அதிகாரிகள் கூறுகையில், ‘சட்டமன்ற தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வினியோகிப்பதை தடுக்கவும், குறிப்பிட்ட தொகைக்கு அதிகமான பணம் கொண்டு செல்வதை கண்டறிந்து பறிமுதல் நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, கடத்தல் சம்பவத்தையும் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு, வெடிபொருட்கள் கடத்திய சம்பவத்தால், இங்குள்ள பறக்கும் படையினர் முறையாக கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபடவில்லை என்று தெரிய வருகிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட மணிநேரத்தில், இடைவிடாமல் வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளது. அதுவரையிலும், துரிதமாக பணி மேற்கொள்ள வேண்டும். எந்த தகவலாக இருந்தாலும் தெரிவிக்க வேண்டும். மீண்டும் தவறு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்’ என்று பேசினர்.