பறக்கும் படை பறிமுதல் செய்த வகையில் உரிய ஆவணம் காண்பித்த 20 பேருக்கு ரூ.20 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

ஊட்டி,மார்ச்7:தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலின் போது பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 26ம் தேதி முதல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள 27 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படை அதிகாரிகள் நாள்தோறும் மாவட்டம் முழுவதும், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் சோதனை செய்கின்றனர்.இதனடிப்படையில் கடந்த 26ம் தேதி முதல் இதுவரையில் மொத்தம் 33 பேரிடம் இருந்து ரூ.59 லட்சத்து 73 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் 20 பேர் தங்களது பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து இதுவரையில் ரூ.20 லட்சத்து 76 ஆயிரத்து 500 திரும்பத் திரும்பப் பெற்றுச் சென்றனர்.மீதமுள்ள 38 லட்சத்து 97 ஆயிரத்து 400 கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கான உரிய ஆவணங்களை காண்பித்தால் மீண்டும் அவர்களிடமே பணத்தை திருப்பி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.59,73,900 வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பெறப்பட்டவை. இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியினரும் பணம் பட்டுவாடா செய்ததாகவோ, அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்ததாக தகவல்கள் இல்லை.

Related Stories: