குருவாயூர் கோயில் திருவிழா ஆறாட்டு நிகழ்ச்சியுடன் நிறைவு

பாலக்காடு,மார்ச்7: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயில் திருவிழா நேற்று முன்தினம் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான குருவாயூர் கோயில் திருவிழா கடந்த 24ம் தேதி யானைகள் ஓட்டப்பந்தயத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விழாவிற்கு பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தன. சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பிரகாரத்தில் நின்றபடியே பக்தர்கள் உற்சவரை வழிபட்டு சென்றனர்.

திருவிழாவின் போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் மாலை உற்சவர் அலங்கரித்த மூன்று யானைகள் மீது செண்டை வாத்யங்கள் முழங்க திருவீதி உலா வந்தார். இரவு ஆற்று படித்துறையில் நீராடி, விசேஷ பூஜைகளை கோவில் மேல்சாந்தி தலைமையில் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து உற்சவர் யானை மீது பவனி வந்து கோவிலை வந்தடைந்தார். கொடிமரத்தில் துவஜரோஹண பூஜைகளுடன் விழாகொடியிறக்கம் நடைபெற்றது.

Related Stories: