குன்னூர் போக்குவரத்து ஆய்வாளருக்கு தமிழக அரசின் அண்ணா விருது

குன்னூர்,மார்ச்7:தமிழக அரசின் அண்ணா விருதினை குன்னூர் போக்குவரத்து ஆய்வாளர் முரளி பெற்றுள்ளார். ஊட்டியை சேர்ந்தவர்  முரளி (58). தற்போது குன்னூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். 1984ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், நீலகிரி ஆயுதப்படையில் பணியமர்த்தப்பட்டார். தடகள வீரரான முரளி தொடர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் ஐந்து முறை முதலிடம் பெற்றுள்ளார்.  1993ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற காவல்துறைகளுக்கு இடையேயான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார். 2006ம் ஆண்டு இவர் குன்னூரில் பணியாற்றிய போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர் மற்றும் உடமைகள் காப்பாற்றியதற்காகவும்,2008ம் ஆண்டு கூடலூரில் பணியாற்றியபோது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியதற்காகவும் உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்றார்.

மேலும் 2004 முதல் 2010 வரை நீலகிரி மாவட்ட ஆயுதப்படை காவல் பிரிவில் மூலம் சென்னையில் நடந்த சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா உட்பட காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழாக்களில் அணிவகுப்பு மரியாதை செலுத்த தலைமையேற்று வழி  நடத்தியுள்ளார். மேலும் 2012ம் ஆண்டில் சென்னையில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் நீலகிரி மாவட்ட காவல் அணிவகுப்பு குழுவினரை வழிநடத்திச் சென்ற முதலிடம் பெற்றார்.

இவரது சிறப்பான பணிக்காக 2020ம் ஆண்டுக்கான  தமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக குடியரசு தின விழாவில் வழங்க முடியாத நிலையில்  இவருக்கு நேரடியாக  காவல் துறை உயர் அதிகாரிகள் அண்ணா பதக்கத்தை வழங்கியுள்ளனர்.

Related Stories: