குன்னூர்,மார்ச்7:தமிழக அரசின் அண்ணா விருதினை குன்னூர் போக்குவரத்து ஆய்வாளர் முரளி பெற்றுள்ளார். ஊட்டியை சேர்ந்தவர் முரளி (58). தற்போது குன்னூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். 1984ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், நீலகிரி ஆயுதப்படையில் பணியமர்த்தப்பட்டார். தடகள வீரரான முரளி தொடர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் ஐந்து முறை முதலிடம் பெற்றுள்ளார். 1993ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற காவல்துறைகளுக்கு இடையேயான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றார். 2006ம் ஆண்டு இவர் குன்னூரில் பணியாற்றிய போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர் மற்றும் உடமைகள் காப்பாற்றியதற்காகவும்,2008ம் ஆண்டு கூடலூரில் பணியாற்றியபோது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியதற்காகவும் உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்றார்.