டாஸ்மாக் திறப்பதை எதிர்த்து வழக்கு கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, மார்ச் 7: டாஸ்மாக் திறப்பதை எதிர்த்த வழக்கில் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் கிழக்கு தாலுகா பாலகிருஷ்ணாபுரத்தில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பார் திறப்பதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எந்த வித முறையான அனுமதியும் பெறவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, இப்பகுதியில் எந்தவிதத்திலும் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் மனுதாரர் கோரிக்கை குறித்து திண்டுக்கல் கலெக்டர் கவனத்தில் கொண்டு 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: