கொள்ளிடம், ஜூன் 11: கொள்ளிடம் அருகே கீழவல்லம் கிராமம் குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படும் நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் இருந்து கீழவல்லம் செல்லும் சாலையோரம் குட்டை அமைந்துள்ளது. இதிலிருந்து தண்ணீர் வெளியேற வழியின்றி தேங்கியே கிடக்கிறது.
அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் குட்டையில் சென்று மழை நீருடன் சேர்ந்து தேங்கி உள்ளது. இதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நிரம்பியுள்ளன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் நிலையும் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கும் நிலையில் இருந்து வருகிறது. எனவே இந்த குட்டையை சுத்தம் செய்தும் கழிவுகள் சென்று சேராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
