தேசிய தொழிற்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, மார்ச்  7: தேசிய தொழிற்சான்றிதழ் பெற தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், வரும் ஜூன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால், நடத்தப்படும் தேசிய தொழிற்தேர்வில் ஒரு தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் கூட்டு தொழிற்பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால், அந்த பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறுவதற்கு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

மேலும் திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (சி.ஓ.இ என்.டி.சி.) பயிற்சியாளர்கள் தாங்கள் படித்த செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருந்தாலும், ஆகஸ்ட்டு மாதம் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமம் தொழிற்பிரிவு பயிற்சியாளர்களும் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை. தொழிற்பழகுனர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலை சட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தனித்தேர்வராக ஒரு தொழிற்பிரிவில் தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அந்த தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப படிவம் முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு, நெறிமுறைகள் மற்றும் இதுதொடர்பான பிற விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்தியமைக்கான ஒப்புகை சீட்டு, கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் ஈரோடு, கோவை உட்பட அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: