மானாமதுரை கொலையில் மேலும் 2 பேர் கைது

மானாமதுரை, மார்ச் 7: மானாமதுரை நெடுஞ்சாலை அலுவலகம் பகுதியை சேர்ந்த தங்கமணி மகன் அக்னிராஜ் (19). சட்டக்கல்லூரி மாணவர். இவர் கடந்த ஜன. 9ம் தேதி மானாமதுரை கோர்ட் எதிரே மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அக்னிராஜ் தினமும் மானாமதுரை காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் அக்னிராஜ் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், கையெழுத்திட்டு வெளியே வந்தார். காவல்நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் நடந்து வந்தபோது, அங்கு பதுங்கியிருந்த ஒரு கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அக்னிராஜ் உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் மானாமதுரை சேர்ந்த தர்மராஜ், விக்கி, அருள், சக்திவேலை ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மேலும் இவ்வழக்கில் சிவகங்கை காமராஜர் காலனி ஆகாஷ் (25), மட்டாகுளம் பொன்னையா (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: