சிவகங்கை, மார்ச் 7: சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் ரூ.1500 கோடி வருவாய், 2000 பேருக்கு வேலைவாய்ப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்பைசஸ் பார்க்கை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததால் முடங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் கடந்த 2013ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஸ்பைசஸ் பார்க் (தொழில் பூங்கா) திறக்கப்பட்டது. இதில் 40 பிளாட்கள் அமைக்கப்பட்டது. வாசனை பயிர்களான மிளகாய், மல்லி, மஞ்சள், இஞ்சி, பெருங்காயம் முதலியவற்றை மதிப்பு கூட்டி, நவீன இயந்திரங்கள் மூலம் பேக்கிங் செய்யப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இப்பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் மத்திய அரசின் 33 சதவீத மானியம் கிடைக்கும். பூங்கா முழுமையாக செயல்படும் நிலையில் ஏற்றுமதி வணிகம் மூலம் ரூ.1500 கோடி வருவாயும், சுமார் 2000ம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் மிளகாய் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் மிளகாய் உற்பத்தியை பெருக்கும் வகையில் இப்பூங்காவை அப்போதைய மத்திய அரசு அமைத்தது. சிவகங்கை, ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயிகள் வாசனை பொருட்களை இங்கு கொண்டு வந்து அரைத்து ஏற்றுமதி செய்யும் வகையில் திறக்கப்பட்ட இந்த ஸ்பைசஸ் பூங்கா இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் ஸ்பைசஸ் பார்க்கில் உள்ள அனைத்து கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டியது.