×

இந்தியாவில் முதலீடு செய்ய உலகளாவிய மருந்து நிறுவனங்களுக்கு அழைப்பு

டெல்லி: இந்தியாவில் முதலீடு செய்யுமாறு உலகளாவிய மருந்து நிறுவனங்களுக்கு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார். புது டெல்லியில் நடைபெற்ற மருந்துத் துறை சார்ந்த உலகளாவிய தூதர்கள் சந்திப்பு மற்றும் GDRC 2026 மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தற்போது சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியாவின் மருந்து துறை, அடுத்த 5 ஆண்டுகளில் தனது அளவை இரட்டிப்பாக்கும் திறனுடன் வளர்ச்சியடைந்து வருவதாக குறிப்பிட்டார்.

இந்தியா தனது பாரம்பரிய ஜெனரிக் மருந்து துறையைத் தாண்டி, புதுமை சார்ந்த மருந்துத் தயாரிப்புகளிலும் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. அதேநேரம் உலகம் முழுவதும் மலிவு விலையில் மருந்துகளை விநியோகிக்கும் பணியையும் இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூறினார்.

நம் நாட்டில் தயாரிக்கப்படும் மலிவு விலை மருந்துகளால் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நோயாளிகள் பயனடைகிறார்கள் என்று கூறினார். இந்திய மருந்துத் துறையின் மூன்று முக்கியத் தூண்களாக நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் கூட்டாண்மை ஆகியவை உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதே போல மருந்து துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை (R&D) ஊக்குவிக்க ஒன்றிய அரசு சுமார் 10 பில்லியன் டாலர் (ரூ. 92,670 கோடி) நிதியுதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் இணைந்து, தொழில்நுட்பப் பங்காளியாகவும் முதலீட்டாளர்களாகவும் மாற வேண்டும் என அமைச்சர் கோயல் வலியுறுத்தி இருக்கிறார்.

 

Tags : India ,Delhi ,Union Minister ,Piyush Goyal ,Global Pharmaceutical Ambassadors Meet ,GDRC 2026 Conference ,New Delhi ,Union… ,
× RELATED மீண்டும் போர் தொடங்க கூடாது.!...