சென்னை: பொன்னேரி, ஆரணி, ஆவடி, அம்பத்தூர், மாங்காடு, ஆலந்தூர், கொட்டிவாக்கத்தில் இரவில் மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சில இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். நேற்றிரவு பல இடங்களில் மின்வெட்டு காரணமாக போராட்டம் நடந்தது.
அதன் விவரம்: ஆவடி: ஆவடி, திருநின்றவூர், அம்பத்தூர் எஸ்.வி.நகர், விஜயலட்சுமிபுரம், மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், கொரட்டூர், பானு நகர், புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்றிரவு 3 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் செய்தபோது முறையான பதில் இல்லை. ஆத்திரமடைந்த மக்கள், திருநின்றவூரில் மின்சார அலுவலகத்தை பூட்டி 2 மணி நேரம் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அம்பத்தூர்: சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அம்பத்தூர்-செங்குன்றம் சாலை கள்ளிகுப்பம் மின்சார அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து புதூர் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். 3 மணி நேரம் கழித்து மின்சாரம் வழங்கப்பட்டதால் மக்கள் கலைந்து சென்றனர்.
ஆரணி: பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் சில நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டது. நேற்றிரவும் மின்வெட்டு ஏற்பட்டதால் ஆரணி பஜாரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பொன்னேரி: மீஞ்சூரில் இரவு நேரத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னையால் கடத்த சில வாரங்களாக மக்கள் சிரமப்படுகின்றனர். இதுபற்றி புகார் அளிக்க மின் அலுவலகத்திற்கு சென்றால் பணியாளர்கள் இருப்பதில்லை. பொறியாளரை தொடர்பு கொண்டால், சரி செய்யும் பணி நடக்கிறது’ என பதில் வருகிறது. கடந்த வாரம் அதிக மின்னழுத்தத்தால் மீஞ்சூரில் ஒரு பகுதியில் வீடுகளில் உள்ள மின் இணைப்புகள் முழுவதும் வெடித்து சிதறியது.
இதுபற்றி கேட்டால் அதிகாரிகள் சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. பல்லாவரம்: மாங்காடு, ரகுநாதபுரம், சீனிவாசா நகர், சிக்ராயபுரம், இந்திரா நகர், ஜனனி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உயரழுத்த மின்சாரம் காரணமாக நேற்றிரவு மின்வெட்டு ஏற்பட்டது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. அதனால் மாங்காடு துணை மின் நிலைய அலுவலகம் முன் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து மின்வாரிய உதவி பொறியாளர் விரைந்து வந்து, ‘நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தார். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
ஆலந்தூர்: ஆலந்தூர் அப்பாவு தெரு, மடுவின் கரை, சவுரி தெரு, மாதவபுரம், தர்மராஜா கோயில் தெரு, உசேன் சுபேதா தெரு, ஜால் தெரு, பாண்டு பீமன் தெரு, ஏகாம்பர் டபேதார் தெரு, வேதகிரி தெரு, கற்பக விநாயகர் கோயில் தெரு, முக்தம்ஜி தெரு. கொத்தவால் தெரு போன்ற பகுதிகளில் நேற்றிரவு தொடர்ந்து 4 மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டிருந்தது. இதில் அப்பாவு தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள வயர் தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி கவுன்சிலர் பிருந்தா, மின்வாரிய பொறியாளருக்கு தகவல் கொடுத்தன்பேரில் உடனடியாக தீ அணைக்கப்பட்டது. நங்கநல்லூர் பகுதிக்குட்பட்ட டிடீஇ காலனி, லட்சுமி நகர், போன்ற பகுதியில் 3 மணி நேரம் மின்சாரமும், முகலிவாக்கம் பகுதிக்கு உட்பட்ட லட்சுமி நகர், குமுதம் நகர், கார்டன் பகுதி, இந்திரா கார்டன் பகுதி, ராஜேஸ்வரி நகர் மற்றும் மடிப்பாக்கம் ராம் நகர், தந்தை பெரியார் நகர், கோவிந்த்சாமி நகர், எல்ஐசி நகர் போன்ற பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின் மின்சாரம் வந்தது. மடிப்பாக்கம் நியூ குபேரா நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி திமுக கவுன்சிலர் ஸ்டெர்லி ஜெய், மின்வாரிய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். உடனே தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. துரைப்பாக்கம்: சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இரவு 11.30 மணி முதல் 12.30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, ‘இது எங்களது பிரச்னை இல்லை’ என்று அலட்சியமாக கூறியதால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட மக்கள், நள்ளிரவு 12.30 மணியளவில் ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தகவலறிந்து நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர். தகவலறிந்து தவெக பகுதி செயலாளர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ சரவணனிடம் புகார் தெரிவித்தார். உடனே அவர், மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அரும்பாக்கம்: அரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு மின்வெட்டு காரணமாக மின்வாரிய அலுவலத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேடவாக்கம்: மேடவாக்கம் புஷ்பா நகர், பாபு நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், பள்ளிகரனை, ஜல்லடியன்பேட்டை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, புதுநகர், பல்லவன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதுபற்றி மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டும் முறையான பதில் இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேடவாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ஊழியர்
மாங்காடு அடுத்த சீனிவாசா நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய மின்வாரிய ஊழியர் விக்ரம் என்பவர் ஏறிய போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
14 பியூஸ் கேரியர் திருடிய 2 பேர் கைது
ஆவடியில் மின்வாரிய அலுவலக பின்புறம் உள்ள மின்சார கேபிள் பெட்டியில் 14 பியூஸ் கேரியர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஆவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (19), கொளத்தூர் பகுதியை சேர்ந்த வினித்குமார் (20) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் திருடப்பட்ட 17 பியூஸ் கேரியர்களை செங்குன்றம் அருகே 1,500 ரூபாய்க்கு விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இருவரும் மீதும் வாகன திருட்டு, இரும்பு திருட்டு போன்ற பல்வேறு திருட்டு புகார்கள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் தொகுதியில் மீண்டும் பவர் கட்
முதல்வரின் தொகுதியான பெரம்பூரில் தினம் தினம் ஏதாவது ஒரு இடத்தில் மின்தடை ஏற்படுகிறது. நேற்றும் கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 1வது பிளாக் முதல் 4வது பிளாக் வரை மின்சாரம் இல்லாததால் கண்ணதாசன் நகர் மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் விரைந்து வந்து, விரைவில் சரி செய்வதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
நிர்வாகத்திறமையின்மையால் மின் வெட்டு
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வைத்திருந்த 18 ஹாட் டிஸ்க் மாயமானது. ஆனால் 34 ஹாட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட 34 டிஸ்க்குகளில் நிரந்தரமாக ஆவணங்கள் மாயமாகி இருந்தது. ஆனால் இந்த ஹாட் டிஸ்க் காணாமல் போனதால்தான் மின் பற்றாக்குறை என்று தவெக தரப்பில் தகவல்களை பரப்பினர். அதோடு ஆவடியில் ஒரு இடத்தில் போதை ஆசாமி 2 பேர் பியூஸ் கேரியரை திருடியதால்தான் தமிழகம் முழுவதும் மின் தட்டுப்பாடு என்ற கோணத்தில் இன்று அமைச்சர் நிர்மல்குமார் பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் நிர்வாகத் திறமையின்மை, குளறுபடியான உத்தரவுகளால்தான் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சரியான திட்டமிடல் இல்லை என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
