மரத்தின் மீது ஓய்வு எடுத்த சிறுத்தை: தோட்டத்தொழிலாளர்கள் பீதி

 

குன்னூர்: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் மரத்தின் மீது சிறுத்தை ஓய்வு எடுத்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக, அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள், மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சர்வ சாதாரணமாக உலா வரத் தொடங்கியுள்ளன.

இதனால் பொதுமக்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். ​இந்த சூழ்நிலைக்கு இடையே, குன்னூர் உபதலை அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் நேற்று ஒரு உயரமான மரத்தின் மீது, பட்டப்பகலிலேயே சிறுத்தை ஒன்று ஏறி அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.​ வீடுகளுக்கு மிக அருகில் இருந்த மரத்தில் சிறுத்தை படுத்திருப்பதை தற்செயலாகக் கண்ட குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே, தங்களின் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருந்தபடி, மிகுந்த அச்சத்துடன் சிறுத்தையைத் மொபைல் போன்களில் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்தனர். ​

மரத்தின் கிளைகளுக்கிடையே சற்று நேரம் சொகுசாக ஓய்வெடுத்த சிறுத்தை, திடீரென மரத்திலிருந்து கீழே எகிறி குதித்து வனப்பகுதிக்குள் வேகமாக ஓடி மறைந்தது. ​பட்டப்பகலில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘‘இனிமேல் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லவே பயமாக இருக்கிறது. எந்த புதருக்குள் இருந்து சிறுத்தை பாயுமோ என்ற பீதியில் வாழ்கிறோம்’’என்று உள்ளூர் தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: