இரவில் காதலனுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அக்காவை அரிவாளால் வெட்டிக் கொன்ற தம்பி கைது!

நெல்லை: சுத்தமல்லியில் காதலித்த அக்காவை அரிவாளால் வெட்டிக் கொன்ற முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். ஒரு முறை காதலித்து தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் வேறொருவரை காதலித்ததால் கொன்றதாக முத்துகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி மேலக்கரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு ராமலட்சுமி என்ற மகளும், முத்துகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். ராமலட்சுமி கங்கைகொண்டான் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் வாலிபர் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்த காதல் சில நாட்களிலேயே முறிந்த நிலையில் ராமலட்சுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு ராமலட்சுமி மீண்டும் வேறுஒரு நபரை காதலித்ததாகவும் கூரப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பி முத்துகிருஷ்ணன், ராமலட்சுமியை கண்டித்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ராமலட்சுமி காதலனுடன் இரவு நீண்ட நேரம் தொலைபேசியில் பேசியதால் முத்துகிருஷ்ணன், ராமலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு ஆத்திரமடைந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சுத்தமல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமறைவான முத்துகிருஷ்ணனை தேடி வந்தனர். இதையடுத்து 8 மணி நேரத்திற்குள் முத்துகிருஷ்ணனை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் ஆணவக் கொலையா ஏன்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்காவை தம்பி வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: