திருச்செங்கோடு, மார்ச் 7: திருச்செங்கோடு ஒன்றியம் பிரிதி ஊராட்சி சொட்டைகாடு பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகம்(65). இவரது மகன் கோபால்(40) என்பவருக்கும், நெட்டவேலாம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி(45) என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பொய்யேரி பகுதியில், 4 ஏக்கர் குட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, சண்முகம் மற்றும் கோபால் வீடு கட்டியதுடன், விவசாயம் செய்து வருவதாக பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பு நிலத்தை, வருவாய் துறையினர் மற்றும் பிடிஓ அகற்றவேண்டும் என தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வருவாய் துறையினர் நடைமுறை படுத்தவில்லை. இதையடுத்து பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.