திருவிடைமருதூர், ஜூன் 9: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோவில் செருகுடியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மாத்தூர்- நன்னிலம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்ததும் நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு உங்களது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் மாத்தூர்- நன்னிலம் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
