குமாரபாளையம், மார்ச் 7: குமாரபாளையம் நகராட்சி பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமானது. குமாரபாளையம் நகராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்டு, சந்தைபேட்டையில் உள்ள குடோனில் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில், பிளாஸ்டிக் கழிவு குடோனில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தீ பிடித்து மள மளவென எரியத்துவங்கியது. இதில் இருந்து எழுந்த நச்சுப்புகை, சுற்றுவட்டார பகுதி முழுவதுமாக பரவியது. இதுகுறித்து குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த 7டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.