ராசிபுரம், மார்ச் 7: ராசிபுரம் அருகேயுள்ள மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த ஆனந்த் மகள் தீபிகா(21). அங்குள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் தள்ளுவண்டியில் சில்லி கடை நடத்தி வந்தார். அலவாய்ப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் சூர்யா(22), கட்டட வேலைக்கு வந்தபோது, தீபிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 7 மாதத்துக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு, அத்தனூர் அடுத்த நடுப்பட்டியில் வசித்து வந்தனர். இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்தை இரு வீட்டு பெற்றோரும் எதிர்த்தனர். குடிப்பழக்கம் உள்ள சூர்யா, சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனிடையே தீபிகா கர்ப்பமானார். இனிமேல் குடிக்காமல் வேலைக்கு செல்ல வேண்டும் என கூறியதால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.