மின்சார ரயில் சோதனை ஓட்டம்

தர்மபுரி, மார்ச் 7: ராயக்கோட்டை-பாலக்கோடு இடையே மின்சார ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. பெங்களூரு-சேலத்திற்கு தர்மபுரி வழியாக பயணிகள் ரயில், சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. ஒருவழிப்பாதையாக இருப்பு பாதை செல்வதால், பல்வேறு சிரமங்களை ரயில்வே துறை அடிக்கடி சந்திக்கிறது. இதனால் ரயில்கள் வந்து சேரும் நேரங்கள் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மின்சார ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கை ஏற்று பெங்களூரில் இருந்து சேலம் வரை மின்சார ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை மின்சார ரயில் இயக்க பணிகள் நடந்தது. அங்கு பணிகள் முடிந்து மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஓசூர்-ராயக்கோட்டை ரயில்நிலையம் வரை மின்சார ரயில் இயக்க, மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து முடிந்தது. ஓசூர்- ராயக்கோட்டை வரை மின்சார ரயில் சோதனையாக தற்போது இயக்கப்படுகிறது. தொடர்ந்து, ராயக்கோட்டை-பாலக்கோடு வரை மின்சார ரயில் இயக்க பணிகள் தீவிரமாக நடந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று மாலை ராயக்கோட்டை முதல் பாலக்கோடு ரயில் நிலையம் வரை மின்சார ரயில் இன்ஜின் மட்டும் இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. இன்று ரயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளது. விரைவில் பாலக்கோடு-தர்மபுரி ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் இயக்கும் வகையில் மின் இணைப்பு வழங்கும்பணி தீவிரமாக நடக்கிறது. இதை தொடர்ந்து, பாலக்கோடு-தர்மபுரி ரயில்நிலையத்திற்கும் மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: