காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரத்தில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், ஜெராக்ஸ் எடுத்த ரூபாய் நோட்டுகளும் சிக்கின. காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரத்தில் போலி மதுபான தொழிற்சாலை இயங்குவதாக சென்னை மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்பி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு எஸ்பி மணி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அவர்களது உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மதுவிலக்குத் தடுப்பு வேட்டை நடந்தது. இதையொட்டி, காஞ்சி மாவட்ட மதுவிலக்குப் பிரிவினரும், தமிழக அமலாக்கத் துறையின் அங்கமான மத்திய புலனாய்வுப் பிரிவினரும் காஞ்சிபுரத்தை அடுத்த திம்மசமுத்திரத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.