மணப்பாறை, மார்ச் 6: மணப்பாறை நகராட்சியின் குப்பை கிடங்கு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை செவலூர் பிரிவு அருகே அமைந்துள்ளது. இதில் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஏறத்தாழ 2,000 டன் குப்பைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளின் கழிவுகளும் இதே இடத்தில் தான் கொட்டப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது தீப்பற்றிக்கொள்வதும், அதை தீயணைப்புத்துறையினர் அணைப்பதற்காக போராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை திடீரென குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், குப்பைகள் மளமளவென எரிய தொடங்கியது.