மணப்பாறை, மார்ச் 6: மணப்பாறை நகராட்சியின் குப்பை கிடங்கு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை செவலூர் பிரிவு அருகே அமைந்துள்ளது. இதில் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஏறத்தாழ 2,000 டன் குப்பைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளின் கழிவுகளும் இதே இடத்தில் தான் கொட்டப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது தீப்பற்றிக்கொள்வதும், அதை தீயணைப்புத்துறையினர் அணைப்பதற்காக போராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை திடீரென குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், குப்பைகள் மளமளவென எரிய தொடங்கியது.
இதில் ஏற்பட்ட புகை மண்டலம் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகள், நெடுஞ்சாலை என அனைத்து பகுதியிலும் பரவி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர 2 மணி நேரம் போராடி பின்னர் அணைத்தனர். அடிக்கடி இதுபோன்ற பாதிப்புகள் இப்பகுதியில் நடைபெற்று வருவதாகவும் நகராட்சி குப்பை கிடங்கினை மற்றொரு இடத்தில் அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.