விகேபுரம்,ஜூன் 8: விகேபுரத்தில் மறுவீட்டிற்கு வந்த மகளுக்கு சாப்பாடு வாங்க சென்ற போது போது பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். விகேபுரம் நகராட்சிக்குட்பட்ட தெற்கு அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் சங்கர் (55). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு ஜெனிட்டா என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். சங்கரின் மகளுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தற்போது புதுமண தம்பதியினர் சங்கரின் வீட்டிற்கு மறு வீடு சடங்கிற்காக வந்துள்ளனர். நேற்று பிற்பகலில் அவர்களுக்கு சாப்பாடு வாங்குவதற்காக சங்கர் வீட்டில் இருந்து தனது பைக்கில் ஆம்பூர் பிரதான சாலையில் டாணா நோக்கி புறப்பட்டார்.
தெற்கு அகஸ்தியர்புரத்தை அடுத்த பிரதான சாலையில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் சென்ற போது. அவ்வழியாக எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் விகேபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
