தொட்டியத்தில் இளம்பெண் மர்மசாவு 2 வாலிபர்கள் கைது: கணவருக்கு வலை

தொட்டியம், மார்ச் 6: தொட்டியம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்த வழக்கில் இரு வாலிபர்களை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரது கணவரை தேடி வருகின்றனர். தொட்டியம் அருகே உள்ள அம்மன்குடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(34), கூலி தொழிலாளி. இவரது மனைவி கோபிகா(23). திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோபிகா கடந்த மாதம் 8ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோபிகாவின் தாய் கோமதி திருச்சி எஸ்.பி., ராஜனிடம் நேரில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் அதனை தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டிருந்தார். இதையடுத்து எஸ்பி ராஜன் உத்தரவின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கோபிகாவிடம் தவறான தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட பாலசமுத்திரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த காவியன்(21), அதே பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்த சபரிநாதன்(22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வாலிபர் காவியன் கோபிகாவிடமிருந்து வாங்கி இருந்த 5 பவுன் சங்கிலியை போலீசார் மீட்டனர். மேலும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட பெண்ணின் சடலத்தை போலீசாருக்கு தெரியாமல் மறைத்து தகனம் செய்த குற்றத்திற்காக போலீசார் கோபிகாவின் கணவர் விஜயகுமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: