திருவாரூர், மார்ச் 6: திருவாரூர் தொகுதியில் வாக்கு பெட்டிகள் வைக்கும் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. கடந்த 26ம் தேதி மாலை முதல் தேர்தல் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, மற்றும் நன்னிலம் என 4 எம்எல்ஏ தொகுதிகள் உள்ளன. இதில் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் சேர்த்து 5 லட்சத்து 14 ஆயிரத்து 536 ஆண், 5 லட்சத்து 35 ஆயிரத்து 963 பெண், இதரர் 70 பேர் என மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரத்து 569 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தல் வரையில் மொத்தம் ஆயிரத்து 168 வாக்குச்சாவடி மையங்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் துணை வாக்குச்சாவடி மையம் அமைப்பதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.