கும்பகோணம், மார்ச் 6: தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமல்நாதன் கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி மற்றும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி அன்று கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் நிலுவைத் தொகை சுமார் ரூ.12ஆயிரத்து 110 கோடியை தள்ளுபடி செய்தும், மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களையும் தள்ளுபடி செய்தும் அரசு அறிவித்து அதற்குரிய அரசாணை கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டது. அவ் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் நிலுவை சான்று வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி சான்றுகள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.