தஞ்சை மாவட்டத்தில் கடன் தள்ளுபடி, நிலுவை சான்று உடனே வழங்க வேண்டும் கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை

கும்பகோணம், மார்ச் 6: தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமல்நாதன் கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி மற்றும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி அன்று கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் நிலுவைத் தொகை சுமார் ரூ.12ஆயிரத்து 110 கோடியை தள்ளுபடி செய்தும், மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களையும் தள்ளுபடி செய்தும் அரசு அறிவித்து அதற்குரிய அரசாணை கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டது. அவ் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் நிலுவை சான்று வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி சான்றுகள் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது.

இன்னும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை உள்ளிட்ட விவரங்களை அனைத்து விவசாயிகளுக்கும் தனித்தனியாக கடிதம் மூலமும் தெரிவிக்க வேண்டும். எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உடன் கடன் தள்ளுபடி சான்று நிலுவை சான்று நகைகள் நில ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இணையதளத்திலும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க  நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: