பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

அறந்தாங்கி, மார்ச் 6: சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக அறந்தாங்கியில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் அறந்தாங்கியில் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமை வகித்தார். அறந்தாங்கி டிஎஸ்பி ஜெயசீலன் முன்னிலை வகித்தார். கொடி அணிவகுப்பை அறந்தாங்கி சப் கலெக்டரும், அறந்தாங்கி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனந்த் மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். செக்போஸ்ட் அருகே துவங்கிய கொடி அணிவகுப்பு பேரணி புதுக்கோட்டை ரோடு, பழைய ஆஸ்பத்திரி ரோடு, தாலுகா ஆபிஸ் ரோடு, பட்டுக்கோட்டை ரோடு, களப்பக்காடு ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. கொடி அணிவகுப்பில் மத்திய துணை ராணுவ படையினர், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: