வந்தவாசி, மார்ச் 6: வந்தவாசி அருகே தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்கும் 66 வயது விறகு வெட்டும் தொழிலாளிக்கு வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த திருமால்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விறகு வெட்டும் தொழிலாளி கன்னியப்பன்(66). இவருக்கு நிரந்தர முகவரி இல்லாததால், வாக்காளர் அடையாள அட்டை பெற முடியாமல், இதுவரையில் அவர் தேர்தலில் வாக்களிக்கவில்லையாம்.இந்நிலையில், வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் விறகு வெட்டும் தொழிலாளர்கள் 149 பேருக்கு அரசு சார்பில் இலவமாக வீடு கட்டி வழங்கப்பட்டது. அதில் கன்னியப்பன் குடும்பத்துக்கும் வீடு கட்டி வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்துக்கு தற்போது நிரந்தர முகவரி கிடைத்துள்ளதால், வாக்காளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி மீசநல்லூர் கிராமத்தில் ஆய்வு செய்ய வந்தபோது, கன்னியப்பனுக்கு வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார். மேலும், கன்னியப்பன் முதன்முதலாக வாக்களிப்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கலெக்டர் அவருக்கு செயல்விளக்கம் அளித்தார். அப்போது, பயிற்சி உதவி கலெக்டர் அஜிதாபேகம், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா, தாசில்தார் திருநாவுக்கரசு, பிடிஓக்கள் காந்திமதி, கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.