சீர்காழி, ஜூன் 6: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரில் நேற்று இரவு மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் போக்குவரத்து நெரிசல் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து வரவும், மூன்று பேர் சேர்ந்து வாகனத்தில் வரக்கூடாது என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து மணிக்கூண்டு அருகே நான்கு சாலையை மறித்து குறுக்கே பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பேருந்துகள் போஸ்ட் ஆபீஸ் அருகே பயணிகளை இறக்கி விட உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
இதேபோல் கொள்ளிட முக்கூட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக பேருந்துகள் பயணிகளை இறக்கி விடாமல் இருக்கவும், போலீசாருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து சீர்காழி கொள்ளிட முக்கூட்டில் இருந்து இருந்து போலீசார் உடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மணியரசன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
