நெல்லை அருகே பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற மர்மநபர்

நெல்லை, மார்ச் 6: நெல்லை அருகே பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை அருகே உள்ள வெள்ளாளன்குளத்தை சேர்ந்த பாக்கியராஜ் மனைவி விஜி (36). இவர், சீதபற்பநல்லூர் அடுத்துள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வழக்கம்போல் வேலை முடிந்து மாமனார் பொன்னுசாமியுடன் மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென விஜியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறிக்க முயன்றார். நகையை விஜி கையில் பிடித்துக் கொண்டதால், மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் மர்ம நபர், பைக்கில் தப்பி சென்றார். சம்பவத்தின்போது விஜியின் நகை மாயமானதோடு அவருக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசில் விஜி புகார் செய்தார். நேற்று காலையில் பொன்னுசாமி, சம்பவம் நடந்த இடத்தில் நகையை தேடிப் பார்த்தார். அங்குள்ள முட்செடியில் தங்க நகை கிடந்தது. இதனை கண்டெடுத்த பொன்னுசாமி சீதபற்பநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். சம்பவம் பற்றி எஸ்ஐ ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து செயின் பறிக்க முயன்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

Related Stories: