காரிமங்கலம் அருகே உயர் மின் கோபுர விளக்கில் டியூப் லைட்

காரிமங்கலம், மார்ச் 6: காரிமங்கலம் அடுத்த ஆரதஅள்ளி கூட்ரோடு வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் மாரண்டஅள்ளி சாலை, பாலக்கோடு சாலை ஆகியவை ஆரதஅள்ளி   கூட்ரோடு பகுதியில் இருந்து பிரிந்து செல்கிறது. இந்த சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயமடைந்து வந்தனர். இதை தடுப்பதற்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின் விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாததால், இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.இந்நிலையில், உயர்மின் கோபுர விளக்கு அமைந்துள்ள பகுதியில், ஒரு டியூப் லைட் பொருத்தியுள்ளனர். அந்தரத்தில் தொங்கியபடி காட்சியளிக்கும் டியூப் லைட் வெளிச்சம் சாலையில் விழவில்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை சரி செய்யாமல், பெயரளவிற்கு டியூப்லைட் பொருத்தியது, பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மின் விளக்கை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: