திருமண மண்டபங்களில் வாக்காளர்களுக்கு விருந்து அளித்தால் கடும் நடவடிக்கை

கோவை, மார்ச் 6:  கோவை மாவட்டத்திலுள்ள திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆலோசனை மேற்கொண்டார்.  அதன்பின், அவர் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக்கூடங்களை அரசியல் கூட்டங்களுக்கும், பிற எவ்வித அரசியல் தேவைகளுக்கும் வாடகைக்கு விடும்போது அதன்விபரத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அந்தந்த வட்டாட்சியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.  திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரால் வாக்காளர்களுக்கு விருந்தளித்தல், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க கூடாது. இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது தெரியவந்தால் உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருமண மண்டபங்களில் அன்னதானம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் அனுமதிக்ககூடாது.

திருமண நிகழ்ச்சிகளின் போது அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றுடன் கூடிய விளம்பர பேனர்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை திருமண மண்டபங்களில் வைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது.  அவ்வாறு இருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட நடைமுறைகளை மீறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், அச்சக உரிமையாளர்களும் அச்சிடும் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி விளம்பரம் வெளியிடுவோரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை தவறாமல் அச்சிட வேண்டும். அச்சடிக்கப்படும் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் சாதி, மொழி, இன அடிப்படையில் விமர்ச்சிக்கும் வாசகங்கள் இருக்கக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அச்சக உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) சிவக்குமார், (பொது) முத்துராமலிங்கம், (கணக்குகள்) சுஜாதா, வட்டாட்சியர் (தேர்தல்) சுந்தரராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: