தாமதமாக வந்ததால் வாத்து நடை தண்டனை மாணவன் பலியான விவகாரத்தில் தந்தைக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

சென்னை, மார்ச் 6: திருவிக நகர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த முரளி என்பவரின் மகன், பள்ளிக்கு தாமதமாக வந்ததால் பள்ளி மைதானத்தை சுற்றி வாத்து நடை போடும்படி தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி வாத்து நடை போட்ட மாணவன் திடீரென மயங்கி விழுந்து இறந்தான். இதை தொடர்ந்து, மாணவனின் தந்தை முரளி அளித்த புகாரின் பேரில், திருவிக நகர் போலீசார், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெய் சிங், தலைமை ஆசிரியர் அருள், தாளாளர் ஜோசப் பெர்னாண்டஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  மகனை பறிகொடுத்த தந்தைக்கு, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். அப்போது நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை பள்ளி நிர்வாகம் சார்பில் தரப்பட்டது. இதையடுத்து மூவர் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி, உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: